அதியுயர் சபையான நாடாளுமன்றத்தையே அவமதித்த மைத்திரிக்கு மன்னிப்பு இல்லை! – ஐ.தே.க. திட்டவட்டம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதியுயர் சபையான நாடாளுமன்றத்தையே அவமதித்து விட்டார். அவருக்கு இனிமேல் மன்னிப்பே கிடையாது.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரினாலும் கூட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறியுள்ளதன் மூலம், நாடாளுமன்றத்தை அவர் அவமதித்துள்ளார். நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்கும் கடப்பாடு அவருக்குண்டு.ஆனால், ஜனாதிபதி தான் நினைத்த மாதிரி செயற்படுகின்றார். அவருக்கு இனிமேல் மன்னிப்பே கிடையாது.

பிரதமரும், அமைச்சரவையும் இல்லை என்ற சபாநாயகரின் உத்தரவை ஏற்றுக்கொண்டே, டிசம்பர் 3ஆம் திகதி நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இதற்காக சபாநாயகரைப் பாராட்ட வேண்டும்.

இன்று நாட்டின் அரசமைப்பு மீறப்பட்டுள்ளது. நீதித்துறை கூறியது என்ன என்பதை ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. முதல் முறையாக, நாட்டில் பிரதமரும், அமைச்சரவையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் உறுதித்தன்மையை தக்கவைக்க சபாநாயகர் மேற்கொண்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டுகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *