இலங்கை வரலாற்றில் 12 ஆம் திகதி திருப்பம் – வருகிறது நம்பிக்கைத் தீர்மானம்!
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது என்று சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போதே மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டு – இலத்திரனியல் வாக்கெடுப்புமுறைமூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே , அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கையை ஐ.தே.க. முன்னெடுக்கவுள்ளது.
இதற்கு முன்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கை வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், நம்பிக்கை தெரிவிக்கும் யோசனை முதல்முறையாக முன்வைக்கப்படவுள்ளது.