ஜனாதிபதி பதவிதுறக்க வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதவிதுறந்து, வீட்டுக்குச்செல்லவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
” 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் திரண்டுகோரினாலும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி கூறிவருகின்றார். அவர் எந்த அடிப்படையில் இவ்வாறு பேசுகிறார் என தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தரப்பின் கருத்துக்கு செவிசாய்க்கமுடியாவிட்டால், பதவியை துறந்து வீட்டுக்குசெல்வதே சிறந்த தீர்வாக அமையும்” என்றார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிறப்பு மாநாட்டின்போது ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக தாக்கி உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள் சிலர் இன்று சபையில் உரையாற்றினர்.