பொட்டு உயிருடன் இல்லை! – பொன்சேகா திட்டவட்டம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும், மீண்டும் புலிகள் புத்துயிர் பெறுவதாகவும் கருணா தெரிவித்திருந்தார்.
எனினும், இதனை மறுக்கும் பொன்சேகா, போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“நாங்கள் பொட்டு அம்மானைப் போரின்போது நிறைவு செய்து விட்டோம். மீண்டும் எழும்புவதென்றால், சடலங்கள்தான் எழும்ப வேண்டும். போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம். இராணுவத்தினர் கடமைகளை நிறைவு செய்துள்ளனர். அத்துடன் தான் யார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என கருணா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கருணாவிடம் கேட்டுக்கொள்கின்றேன். நான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று அந்தப் பதிவில் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.