மலையகமெங்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – தொழிற்சாலைகள் முடக்கம்!
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பு தெரிவித்துவருவதால்- அதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் மலையகமெங்கும் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அதன் பணிகளை முடக்கும் வகையில் இன்று முதல் பணிபுறக்கணிப்ப போராட்டத்தில் குதிக்குமாறு தொழிலாளர்களுக்கு, இ.தொ.காவின் தலைவர் தொண்டமான் நேற்றுமாலை அறைகூவல் விடுத்திருந்தார். இதற்கமையயே இன்று காலை முதல் தொழிலாளர்கள் – பணிக்குசெல்லாமல் போராடிவருகின்றனர்.
அதேவேளை, கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களும் இத்தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.