நீதிமன்ற தடைஉத்தரவால் திரிசங்கு நிலையில் மைத்திரி – அமைச்சுகளின் செயலாளர்களுடன் அவசர சந்திப்பு!

பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ள நிலையில், சகல அமைச்சுகளின் செயலாளர்களையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்கிழமை முற்பகல் அவசரமாகச் சந்திதார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச் சேவைகளை எந்தவித தடைகளுமின்றி , தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் கட்டளைகளையும் சகல அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே, நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுமாறும், அனைத்து அரச சேவையாளர்கள், முப்படையினர் மற்றும் போலீசாருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை, இடைக்காலத் தடையுத்தரவொன்றினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை  கலைக்கப்பட்டதை அடுத்து, அமைச்சுக்களின் செயலர்களும் பதவி இழந்து விடுவார்கள் என்றும்,  இதனால் தற்போது  மைச்சுக்களின் செயலர்கள் எவரும் பணியாற்ற முடியாது எனவும் சட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 52 (3)  ஆவது  பிரிவுக்கு அமைய, அரசியலமைப்பின் 48 (2) ஆவது  பிரிவின் கீழ், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர்,  அமைச்சரவை பதவி இழக்கும் போது,   அமைச்சுக்களின் செயலர்களும், பதவி இழந்து விடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. எனவே, மைத்திரியின் இன்றைய நடவடிக்கை அரசமைப்பை மீறிய செயற்படாக பார்க்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *