38 ஆண்டுகளாகப் பிரிந்ததில்லை! – தந்தையின் இறுதிச்சடங்கில் உயிரிழந்த மகள்!

தந்தை இறந்த சோகத்தில், அவரது உடல் அருகே மகள் உயிரிழந்த சோகச் சம்பவம், ராசிபுரம் அருகே உள்ள  கூனவேலம்பட்டி புதூரில் நடந்துள்ளது.

ராசிபுரம் அருகே  உள்ள கூனவேலம்பட்டி புதூரில் உள்ள  முத்துவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர், துளசிராமன். இவரது மனைவி ஜானகி . இவர்களுக்கு மகாராஜன் என்ற மகனும், விஜயா , அம்பாயி என்ற  இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. துளசிராமன், விசைத்தறி தொழிலில் ரீலிங் (கோன் பூட்டு அடிப்பது) தொழில் செய்துவந்தார். மேலும் இவர், கூனவேலம்பட்டி புதூரின்  4-வது வார்டு தி.மு.க அவைத் தலைவராகவும் இருந்து வந்தார்.

15 ஆண்டுகளுக்கு முன், பாச்சல் கிராமத்திலுள்ள ஒருவருடன் அம்பாயிக்குத் திருமணம் நடந்தது. ஆனால், சில மாதங்களிலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தாய் வீட்டுக்கே வந்துவிட்டார். விவாகரத்து பெற்று, பெற்றோருடன் வசித்துவந்தார். கடந்த 38 ஆண்டுகளில்,  தந்தையும் மகளும் பெரிய அளவில் பிரிந்ததில்லை.  துளசிராமன், மகளை நன்கு பார்த்துக் கொண்டார். இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் துளசிராமனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதைக்கண்டு அவரது மனைவி ஜானகி, மகள் அம்பாயி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் அவரது இன்னொரு மகள் விஜயாவும் விரைந்து வந்தார்.

இந்த நிலையில், இறந்த துளசிராமனுக்கு தேங்காய், பழம், ஊதுபத்தி வைத்து இறுதிச்சடங்கு செய்யத் தயாரானார்கள். அப்போது அம்பாயி, திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்தார். தந்தை இறந்த அரை மணி நேரத்துக்குள் மகள் அம்பாயியும் உயிரிழந்ததால், அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தந்தை, மகள் இருவரின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். துளசிராமன் மற்றும் அம்பாயி ஆகியோர் இறந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், கூனவேலம்பட்டி புதூர், தோணமேடு, குருசாமிபாளையத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் திரண்டுவந்து அவர்களது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், இருவரின் உடல்களும் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகளும் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *