24 மணிநேரத்துக்குள் முக்கிய அறிவிப்பு! நாட்டின் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு!! – கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு
“ஆட்சியிலிருக்கும் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, 24 மணிநேரத்துக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணவுள்ளேன்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொறிமுறை ஒன்றின் கீழ் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே இன்று மாலை நேரடிப் பேச்சு நடைபெற்றது. இதன்போது தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவுத் தீர்ப்பு வெளியானது. இதையடுத்துக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
“ஆட்சியிலிருக்கும் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்தத் தீர்ப்பின் பிரகாரம் நாட்டில் தற்போது அரசு என்று ஒன்றுமே இல்லை. நான் மட்டுமே பதவியில் உள்ளேன். எனவே, புதிய அரசு ஒன்று அமையவேண்டும். தேவையான நடவடிக்கைகளை நான் எடுக்கவேண்டும். 24 மணிநேரத்துக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணவுள்ளேன்” என்றார்.