இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் மரணம்!
இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள் வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு கல்விச் சுற்றுலா வந்திருந்தனர். இங்குள்ள காரோ மாவட்டம், டவுலு கிராமத்தில் ஒரு விடுதியில் இவர்கள் அனைவரும் தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று அந்தப் பகுதியில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதி மண்ணுக்குள் புதைந்தது. தகவல் அறிந்து விரைந்துவந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் காயங்களுடன் 7 பேரைக் காப்பாற்றினர். இடிபாடுகளுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 7 மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர்.