ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் பெப்ரவரி 15ஆம் திகதி வரை நீடிப்பு!
மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவைகள் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவி காலம் அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி தொடக்கம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை குறித்த இரண்டு நிறுவனங்களிலும் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து ஆராயவே விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.