காதலுக்கு பெற்றோர் போர்க்கொடி – ரயில்முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தமிழக காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா(21) எனும் கல்லூரி மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்குமார் (23) என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிந்ததால், பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவி மோனிஷாவை அவரது பெற்றோர் கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய மோனிஷா, காதலர் ஹேமந்த்குமாருடன் சேர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு குப்பம் ரயில் நிலையத்திற்கு சென்ற அவர்கள், அவ்வழியாக வந்த ரயிலின் முன்பு பாய்ந்தனர்.  இதில் இருவரும் உடல் சிதறி பலியாகினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டனர். அப்போது காதல் ஜோடியின் பைகள் கிடைத்தன.

அதில் இருந்த கடிதம் ஒன்றில், ’இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *