ஜனாதிபதியை அடிபணிய வைப்போம் – சபையில் அநுர சூளுரை!
” நிறைவேற்று அதிகாரத்தைக்கொண்டிருந்தாலும் அரசமைப்புக்கு அடிபணிந்தே ஜனாதிபதி செயற்படவேண்டும். இதை வலியுறுத்தியே நாம் போராடிவருகின்றோம்” என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘‘ பிரச்சினைகள் தலைதூக்கும்போது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண்பதே சிறந்த வழிமுறையாகும். ஆனால், இங்கு சூழ்ச்சியே அரங்கேறியுள்ளது. இது பற்றி எவ்வாறு பேச்சு நடத்துவது? ஜனாதிபதியும், சபாநாயகரும் தனிப்பட்ட ரீதியில் பேச்சு நடத்தலாம். அது அவர்களுக்குரிய உரிமை.
ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எல்லளவேனும் நம்பமுடியாது. அவருடன் பேச்சு நடத்துவதற்கு நாம் தயாரில்லை. நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஏற்க மறுக்கின்றார். பிழையென தெரிந்தும் மீண்டும், மீண்டும் பிழையான செயல்களையே அவர் செய்துவருகின்றார்.
எனவே, அரசமைப்புக்கு ஜனாதிபதி அடிபணியவேண்டும். அதை செய்யவைப்பதே எமது இலக்காகும். நாம் ரணிலுக்கு சார்பாகவோ அல்லது மஹிந்தவுக்கு எதிராகவோ செயற்படவில்லை. ஜனநாயகத்துக்காகவே குரல் கொடுக்கின்றோம்.” என்றும் அநுரகுமார திஸாநாயக்க.