புலிச் சந்தேகநபர்களுக்குப் பயந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டார் ரவீந்திர!
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட, முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும். டிசம்பர் 05ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்க, கொழும்பு கோட்டை நீதிவான் ரங்க திஸநாயக்க உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில், அவர் கொழும்பு புதிய விளக்கமறியல் (மகஸின்) சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரிடம், பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், நேற்றிரவு 8.30 மணியளவில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கொழும்பு புதிய விளக்கமறியல் (மகஸின்) சிறைச்சாலையில் புலிச் சந்தேகநபர்கள் இருப்பதால் அவரது பாதுகாப்பது கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும்போது அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு கோட்டை நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.