சார்க் மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு , இம்ரான் அழைப்பு ! இலங்கையின் சார்பில் பங்கேற்பது யார்?

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 20 ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, இந்தியப் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுக்கவுள்ளது. 2016 இல் இஸ்லாமபாத்தில் நடைபெற்ற மாநாட்டை மோடி புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்க் மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். கடைசியாக 2014ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். இலங்கையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது.

அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 19 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாது என அறிவித்தது. அதேபோல் வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறினார்.

அதேவேளை, இலங்கைக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இலங்கையில் தற்போது அரசொன்று இல்லை. பிரதமரும் இல்லை என கூறப்படுவதால், அரசியல் குழப்பம்தீரும் வரை தலைவர்கள் வெளிநாடு செல்லமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. எனினும், மேற்படி மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பார் என அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *