சபாநாயகரைப் போற்றிய செல்வம் எம்.பி. மாவீரர்களுக்கும் அஞ்சலி!
“தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வீரகாவியம் படைத்த மாவீரர்களை இந்தச் சபையில் நினைவுகூருகின்றேன்.”
– இவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்தார் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன்.
நாட்டில் அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியிலும் தற்றுணிவுடன் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் சபாநாயகர் கரு ஜயசூரியவைப் பாராட்டி உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்தி நானும் போராடி இருக்கின்றேன். ஆனால், இறுதி மூச்சு வரை சமர்க்களத்தில் நின்று போராடி தம்முயிரைத் தியாகம் செய்த வீரமறவர்களான மாவீரர்களை இன்றைய புனித நாளில் நினைவுகூர விரும்புகின்றேன்.
தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன், இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வும் காணப்பட வேண்டும்” – என்றார்.