சி.ஐ.டி. விசாரணையிலிருந்து நேற்றும் நழுவினார் அட்மிரல்!
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காகப் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று முற்பகல் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று அவர் விசாரணைக்குச் சமூகமளிக்கவில்லை.
ஏற்கனவே கடந்த செப்டெம்பர் மாதம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைக்காக அழைத்திருந்தபோதும் அவர் திடீரென மெக்சிக்கோவுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை அழைப்பைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன புறக்கணித்திருப்பது இது இரண்டாவது தடவையாகும்.
கொழும்பில்11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் என அழைக்கப்படும் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை, மறைத்து வைத்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவினர் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும் முழு உண்மைகளையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கத் தயாராக உள்ளார் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.