மைத்திரி – மஹிந்தவை ஒரே தடவையில் தோற்கடிப்போம் – சம்பிக்க சபதம்!
” மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு துணிவிருந்தால் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலை ஒரே தடவையில் நடத்தவேண்டும். அப்போது இருவரையும் ஒரே நேரத்தில் தோற்கடித்து காட்டுவோம்” – என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான சம்பிக்க ரணவக்க சூளுரைத்தார்.
ஜனநாயகத்துக்காக கண்டியில் இன்று நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
” நாடாளுமன்றத்தில் எமது அணிக்கு பெரும்பான்மை இருப்பதை பல தடவைகள் நிரூபித்தோம். ஆனால், தமக்கே பெரும்பான்மை இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மஹிந்த, மைத்திரி கூட்டணி வாக்கெடுப்புக்கு அஞ்சுகிறது. வெள்ளியன்று இதை வெளிப்படையாக காணக்கூடியதாக இருந்தது.
பொதுத்தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. முடியுமானால் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலை ஒரே தடவையில் நடத்தட்டும். அப்போது மைத்திரி, மஹிந்த ஆகிய இருவரையும் தோற்கடிப்போம். இன்னும் பல ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஆட்சியே நீடிக்கும்” என்றும் சம்பிக்க குறிப்பிட்டார்.