நாடாளுமன்ற சம்பிரதாயத்தை எட்டி உதைக்காதீர் – சபாநாயகரை சாடுகிறது மஹிந்த அணி
ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, நாடாளுமன்ற சம்பிரதாயங்களை எட்டிஉதைக்கும் வகையில் சபாநாயகர் கருஜயசூரிய செயற்படுகின்றார் என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஸ் குணவர்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகரால் விடுக்கப்பட்ட அறிவிப்பை கடுமையாக எதிர்த்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசொன்று இல்லையென சபாநாயகரால் கூறமுடியாது. எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுவிட்டதாக விடுக்கப்பட்ட அறிவிப்பு மீளப்பெறப்படவேண்டும். தெரிவுக்குழு குறித்தான சபாநாயகரின் அறிவிப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
ஐக்கிய தேசியக்கட்சியின் சபைபோலவே நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு சபாநாயகர் முற்படுகின்றார். என்று சபை உரிய வகையில் பக்கச்சார்பின்றி இயங்குமோ அதுவரை சபை அமர்வில் கலந்துகொள்வதில் பயன் இல்லை.” என்று கூறினார்.