‘தில்’ இருந்தால் 29ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வாருங்கள்! – மஹிந்த அணிக்கு ரணில் பகிரங்க சவால்
நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி, பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையைத் தோற்கடிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
அலரி மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால்தான் அவர்களின் உறுப்பினர்கள், வாக்கெடுப்பு நடத்துவதை ஒவ்வொரு முறையும் குழப்பி வருகின்றார்கள்.
எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தும் பிரேரணை மீது வாக்களிக்குமாறு அவர்களிடம் நான் சவால் விடுகின்றேன்.
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டால், அந்தக் கணமே அரசோ, அமைச்சரவையோ கிடையாது. எனவே, அந்தச் செயலகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டிய தேவை இல்லை” – என்றும் அவர் கூறியுள்ளார்.