இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை: சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்கும் உத்தரவுக்குப் பொலிஸார் ஆட்சேபனை மனு!

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்றின் கட்டளையை மறு ஆய்வு செய்யவேண்டும் என அரச சட்டவாதி ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸார் ஆட்சேபனை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

“மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே, மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்று விசாரணைகளை முன்னெடுக்கின்றோம். சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் விசாரணைகள் பாதிக்கப்படும். அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர் கொலை தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தமது ஆட்சேபனையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆட்சேபனை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் பொலிஸார், மேல் நீதிமன்ற அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனிடம் நேற்றுக் கையளித்துள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேற்கொண்ட நடவடிக்கையை எடுக்குமாறும் பொலிஸார் அரச சட்டவாதியிடம் கேட்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய தெற்கு வீதிப் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் பிரதான சந்தேகநபரான செல்வராசா மகிந்தன் என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் பாலசிங்கம் மகேந்திராசா, செல்வராசா ஜயந்தன் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் 2017ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார். அவை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் கட்டளை வழங்கப்பட்டது.

“சந்தேகநபர்கள் மூவரும் காசுப் பிணையாக தலா 2 இலட்சம் ரூபா பணத்தை நீதிவான் நீதிமன்றில் வைப்பிலிடவேண்டும். மூவரும் 5 இலட்சம் ரூபா பெறுமதியையுடைய தலா இரண்டு ஆள் பிணையாளிகளை முற்படுத்த வேண்டும். சந்தேகநபர்கள் மூவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிடவேண்டும். மூவரும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படுகின்றது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *