சபாநாயகருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு! – தாக்கல் செய்தது மஹிந்த அணி
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குச் சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை மஹிந்த அணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்றுத் தாக்கல் செய்தார்.
மனுவின் பிரதிவாதிகளாகச் சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் நாடாளுமன்றச் பொதுச் செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கலைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்குச் சபாநாயகர் மேற்கொண்ட தீர்மானம் அரசமைப்புக்கு விரோதமானது என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதால் நாட்டின் அரசமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும், இந்தச் செயற்பாட்டினால் சபாநாயகர் உட்பட பிரதிவாதிகள் அரசமைப்புச் சீர்திருத்தத்தை மீறியுள்ளனர் எனவும் தீர்ப்பு வழங்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.