குரல் வாக்கெடுப்பை நான் ஏற்கமாட்டேன்! – ரணில் முன் மைத்திரி தெரிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பெயர் கூறி அழைத்து அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெயர் கூறி அழைத்து அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றினால் மாத்திரமே நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது தன்னால் முடிவெடுக்க முடியும் என்றும் மைத்திரிபால கூறியுள்ளார்.

“குரல் வாக்கெடுப்பை பொருத்தமானதாகக் கருத முடியாது. ஏனென்றால், இது அரசை மாற்றுவது தொடர்பான முக்கியமான விவகாரம்” என்றும் அவர் தெரிவித்தார் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்ற நடைமுறைகளை ஜனநாயக ரீதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

எனினும், இந்தக் கூட்டத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சபாநாயகர் நிராகரித்திருந்தார். அத்துடன் ஜே.வி.பியும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தது.

நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம், இயல்பான சூழலில் நடந்தது எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ள அதேவேளை, இந்தக் கூட்டம் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிந்ததாக மஹிந்த தரப்பு உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *