பறிபோகின்றது வியாழேந்திரனின் எம்.பி. பதவி! – மஹிந்த பக்கம் தாவியதால் கூட்டமைப்பு அதிரடி
“பல கோடி ரூபாக்களுக்கு விலை போய் மஹிந்த அணியிடம் சரணாகதியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்படுவார். அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் உடன் பறிப்போம்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த இரா.சம்பந்தனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த அணி பக்கம் தாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் எமது கட்சியிலிருந்து விலக்கப்படுவார். அவரின் எம்.பி. பதவியை உடன் பறிக்கும் நடவடிக்கையை நாம் எடுப்போம். அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர முடியாது. அவ்வாறு தொடர்வதற்கு அவருக்கு உரிமை இல்லை. எனவே, முதலில் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” – என்றார்.