அரியணை ஏறியதும் தமிழர்களுக்குத் தீர்வு! – சம்பந்தனிடம் ரணில் வாக்குறுதி

ஐக்கிய தேசியக் கட்சி அரசை அமைத்தவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத் தரப்படும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மாத்திரம் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

“ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவைத் தெரிவிக்கின்றோம். ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினர்.

இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்படி உறுதிமொழியை வழங்கினார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *