நிறைவேற்று – சட்டவாக்கம் மோதல் உக்கிரம்! மஹிந்தவுக்கு எதிரான பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி!!

தாம் நியமித்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்றிரவு அவர் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

“புதிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்போது, நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக, தேவையான அரசமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு அமைவாக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

அத்துடன், நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற உறுப்பினர் எனக் கருதும் ஒருவரை, பிரதமராக ஜனாதிபதி நியமிக்க முடியும். ஜனாதிபதியின் கருத்தை கேள்விக்குட்படுத்தவோ, பரீட்சிக்கவோ முடியாது.

தற்போதைய சூழ்நிலையை மதிப்பீடு செய்து நாட்டுக்கு மிகவும் பொருத்தமான முடிவை எடுப்பேன். அதற்கு நாடாளுமன்ற நடைமுறைகளோ, பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவையோ இருக்காது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பி வைத்த ஆவணத்தில் எம்.பிக்களின் கையெழுத்துக்கூட இருக்கவில்லை” – என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *