ஐயப்பனுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் – பாதுகாப்பு உச்சம்!
சபரிமலை தரிசனத்திற்கு பெண்கள் முன்பதிவு மற்றும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களினால் 15 ஆயிரத்து 59 பொலிஸாரை பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாமென உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .
இதேவேளை பெண்கள் கோயிலுக்கு செல்ல தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் சபரி மலையில் நடைபெறவுள்ள மண்டல பூஜையில் கலந்துகொள்வதற்கு 500க்கும் மேற்பட்ட பெண்கள் முன்பதிவுகளை செய்துள்ளனர். ஆகையால் பாரிய பிரச்சினை தோன்றுவதற்கு வாய்ப்புள்ளமையால், 15 ஆயிரத்து 59 பொலிஸாரை பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தவுள்ளதாக கேரள பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 16ஆம் திகதி வரை சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் சன்னிதானத்தில் மாத்திரம் 4 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனங்கள் அப்பகுதியில் தற்போதே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.