பதிலடி பயங்கரமாக இருக்கும் – மோதவேண்டாமென ஐ.தே.கவுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
தான் இப்போது ஒரே ஒரு துருப்புச்சீட்டை மாத்திரமே பயன்படுத்தியிருப்பதாகவும், இன்னமும் பல துருப்புச்சீட்டுகள் தமது கைவசம் இருப்பதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
நேற்றி்ரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”நான் ஏற்கனவே எடுத்த எந்த முடிவில் இருந்தும் பின்வாங்கமாட்டேன்.
வரும் 14ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐதேகவிடம் கோருவேன்.
அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அரசியலமைப்புக்கும், நாட்டின் சட்டங்களுக்கும் அமைவாக, ஏனைய துருப்புச்சீட்டுகளைக் கையில் எடுத்து விளையாடுவேன்.” என்றும் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் அறிவிப்புகளால் ஜனாதிபதி கடும் சீற்றத்தில் இருக்கிறார் என்றும், 14 ஆம் திகதிக்கு பிறகு அதிரடி நடவடிக்கைகளை எடுக்ககூடும் என்றும் சு.க. தகவல்கள் தெரிவிக்கின்றன.