மைத்திரி – மஹிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஜே.வி.பி. ஆதரவு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காகக் கொண்டு வரப்படும் எந்தப் பிரேரணைக்கும் தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. கருத்து வெளியிடுகையில்,
“பதவிகள், சலுகைகள் மற்றும் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மைத்திரி – மஹிந்தவினால் முன்னெடுக்கப்படும் இந்த சதித் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்.
முதலில் இந்த அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே ஜே.வி.பி. செயற்பட வேண்டியுள்ளது.
இந்த சதித் திட்டம் நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேறும் தோற்கடிக்கப்பட வேண்டும். எனவே, நாளை ஜே.வி.பி. நான்கு முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தவுள்ளது.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாக சபாநாயகர் கூட்ட வேண்டும்.
சபாநாயகர் அண்மையில் வெளியிட்ட காட்டமான அறிக்கையை ஜே.வி.பி. வரவேற்கின்றது” – என்றார்.