ஆட்சி மாற்றம் தவறானது! எதிரணியில் அமர்வேன்!! – மஹிந்தவின் சகாவே அறிவிப்பு

புதிய அரசில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று மஹிந்த அணி உறுப்பினரான குமார வெல்கம எம்.பி. அறிவித்துள்ளார். அத்துடன், எதிரணியில் அமர்ந்து சுயாதீன எம்.பியாக செயற்படப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்து கருத்து வெளியிடுகையிட்ட அவர் மேலும் கூறியதாவது:-

“அரசமைப்பின் பிரகாரம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதுவே சிறந்த வழியாக இருந்திருக்கும். தனக்குப் பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்பதால்தான் மஹிந்த இவ்விவகாரத்தில் இறங்கினார். இல்லையேல் அவர் களமிறங்கியிருக்கமாட்டார். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றின் ஊடாக இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம்.

புதிய அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை. ஆடை அணிந்துகொண்டு அவ்வாறு செய்யமுடியாது. மஹிந்த பிரதமரானது மகிழ்ச்சி. அவருக்கு ஆதரவு வழங்குவேன். சார்பாக வாக்கும் அளிப்பேன். ஆனாலும், எதிரணியில் அமர்ந்து சுயாதீனமாகவே இயங்குவேன்” – என்றார்.

அதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கக் கூடாது என வெல்கம வெளிப்படையாக அறிவித்து வந்ததால், மஹிந்த அணி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக பிரசாரம் செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *