சபையில் ஆசனங்கள் ஒதுக்குவதில் சிக்கல்!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவது குறித்து, இதுவரை இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்று நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற பல புதிய அமைச்சர்கள் பதவியேற்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பத்திரம் இதுரை நாடாளுமன்றத்துக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களிலும் மேலும் பலர் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள நிலையில், உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சியுடன் இணையும் சந்தர்ப்பம் உள்ளதால், நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்க முடியாதுள்ளது எனவும் நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில், 13ஆம் திகதியளவிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய சபாநாயகரை நீக்க வேண்டுமெனில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவேண்டும் எனவும் இத்தவெல மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *