இறுதிநேர தாவல்களால் கொழும்பு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு !
பிரதான இருதரப்புகளிலிருந்தும் இறுதிநேரத்தில் தாவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் தெற்கு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 16 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கடும் அழுத்தம் காரணமாக 14 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கே ஆட்சிபீடமேறலாம் என்பதால், குதிரைப்பேரம் இடம்பெற்றுவருகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் ‘பல்டி’யடித்துவருவதால் அவர்களுக்கு கடிவாளம்போடும் முயற்சியில் ரணிலும், அவரின் சகாக்களும் இறங்கியுள்ளனர்.
மறுபுறத்தில் சிறுகட்சி உறுப்பினர்களை வளைத்துப்போடும் நடவடிக்கையில் மஹிந்த, மைத்திரி கூட்டணி இறங்கியுள்ளது. மஹிந்தபக்கம் தாவில் உறுப்பினரொருவர், இன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியமையானது முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகின்றது.
எனவே, எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம்கூடி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்வரை அரசியல் பரபரப்பும், அரசியல் குழப்பமும் இலங்கையில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.