14ஆம் திகதியே நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி அனுமதி! – வெளிவந்தது விசேட வர்த்தமானி அறிவித்தல்
நாடாளுமன்ற அமர்வை இம்மாதம் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவால் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை திடீரென விலக்கி அப்பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்மாதம் 16ஆம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், புதிய பிரதமர் நியமனத்தால் இலங்கையில் தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்பத்துக்கு உடன் தீர்வுகாண எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்பே நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்ததையடுத்து குறிப்பிட்ட தினத்துக்கு இரண்டு தினங்கள் முன்னதாக முன்கூட்டி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி முடிவு செய்திருக்கின்றார்.
எனவே, சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றுமுன்தினம்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பில் அறிவித்ததன்படி நாடாளுமன்றம் தீபாவளிக்கு மறுநாள் 7ஆம் திகதி கூடுவதற்கு சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.