வியாழேந்திரனை மஹிந்த பக்கம் வளைக்க கனடாவில் நடந்த பேரம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், திடீரென மஹிந்த ராஜபக்ஷவின் அரசுடன் இணைந்து கொண்டதன் பின்னணியில் நடந்த நாடகம் குறித்த சில தகவல்கள் ஆங்கில இதழ் வாரஇதழ் ஒன்றில் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை, கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.
கனடாவில் இருந்து கொழும்புக்கு 24 மணித்தியாலங்கள், விமானத்தில் ஒன்றாகப் பயணித்த தனது சகாக்களிடம் அந்தத் திட்டத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருந்தார்.
கனடாவில் உள்ள தமிழ்ச் சமூகத்தினால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.துரைரட்ணசிங்கமும் எஸ்.வியாழேந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் அழைக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்வு முடிந்த பின்னர், மூவரும் ஒன்றாக விமானம் ஏறினர். பயணத்தில் அவர்களின் ஆசனங்களும் அருகருகேதான் இருந்தன.
அவர்கள் தரையிறங்கியதும், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு துரைரட்ணசிங்கத்துக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களது பங்கேற்பு முக்கியமானதாக இருந்தது.
வியாழேந்திரனுக்கு அந்தத் தகவலை வழங்குவதற்கு கூட்டமைப்பு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஏனென்றால், அவர் விமான நிலையத்தில் இருந்து, கட்டுநாயக்கவுக்கு அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறிது ஓய்வெடுத்த பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வியாழேந்திரன் கனடாவில் இருந்தபோதே, இந்தப் பேரத்தை ஐ.தேக. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடத்தி வைத்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது – என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.