அதிபர் இல்லாமல் இயங்கும் 17 பாடசாலைகள் – கம்பஹாவில் அவலம்!
கம்பஹா மாவட்டத்திலுள்ள தொம்பே கல்விக் காரியாலயப் பிரிவில், 17 அதிபர் வெற்றிடங்கள் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.
தொம்பே கல்விப்பிரிவில் 47 பாடசாலைகள் இயங்கும் நிலையில், இவற்றில் 17 பாடசாலைகளில் அதிபர்கள் இன்றி பதில் அதிபர்கள் மாத்திரம் கடமையாற்றி வருவதாக, தொம்பே பிரதேச பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இப்பிரிவில் இயங்கும் ஒரு பாடசாலை ஆறு மாத காலமாக அதிபர் இன்றியே இயங்கி வருவதாகவும், இது தவிர, இவ்வருட இறுதிக்குள் அதிகளவிலான அதிபர்கள் இப்பாடசாலைகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும், பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில், பலவிடுத்தம் இங்குள்ள கல்வி அதிகாரிகளை அறிவுறுத்திய போதும், இதுவரையிலும் அதிபர் ஒருவர் இப்பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவில்லை என்றும், இதனால், இப்பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள், பெருமளவில் பாதிக்கப்பட்டும், வீழ்ச்சியடைந்து இருப்பதாகவும், பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.