தெற்கு அரசியலில் சதுரங்க ஆட்டம் ஆரம்பம்! பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பும் பிரயத்தனம்!! குதிரைப் பேரமும் உச்சம்!!!

நாடாளுமன்றம் எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ளதால், பெரும்பான்மைப் பலத்தை உறுதிபடுத்திக் கொள்வதற்காக ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மைத்திரி – மஹிந்த கூட்டணியும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை ( 113 உறுப்பினர்களின் ஆதரவு) நிரூபிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களைத் தம்பக்கம் வளைத்துப் போடும் முயற்சியில் மஹிந்த – மைத்திரி கூட்டணி தீவிரமாக களமிறங்கியுள்ளது. பஸில் ராஜபக்ஷ நேரடியாக களமிறங்கி இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றார்.எனினும், பெரும்பான்மைப் பலம் இன்னும் உறுதியாகவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் மதில்மேல் பூனையாக இருந்து வருகின்றனர். துமிந்த திஸாநாயக்கவை பஸில் ராஜபக்ஷ வீடு தேடிச் சென்று சந்தித்திருந்தாலும், அவர் சாகதமான பதிலை வழங்கவில்லை எனத் தெரியவருகின்றது.

சு.க. உறுப்பினர்களில் சிலர் ரணிலுடன் சங்கமிக்கக் கூடும் அல்லது நாடாளுமன்றில் நடுநிலை வகிக்கக்கூடும் என அரசியல் களத்தில் பேசப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுடன் ஜனாதிபதி மைத்திரியும் பேச்சு நடத்தியுள்ளார் எனவும், அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்தார் எனவும் பிறிதொரு தகவல் தெரிவித்தது.

தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேராமல் தனித்துச் செயற்படப் போவதாகவும் ஜனாதிபதியிடம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார் எனவும் அந்தத் தகவலிலிருந்து அறியமுடிந்தது.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மையை உறுதிபடுத்துவதற்குரிய ஆதரவு இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் குத்துக்கரணம் அடிப்பதால் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, தமது உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஐ.தே.க ரணில் பெரும் பாடுபட்டு வருகின்றார். இறுதிநேரத்தில் ‘பல்டி’கள் அரங்கேறும் என்பதால் அரசியல் களத்தில் குதிரைப் பேரமும் உச்சம் தொட்டுள்ளது. எது எப்படியோ 5 ஆம் திகதிவரை அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *