சிவன் கோவிலில் வைத்து திருநங்கையை கரம் பிடித்த இளைஞர்

தமிழ் நாட்டின் தூத்துக்குடி சிவன் கோவிலில் திருநங்கையை, வாலிபர் திருமணம் செய்தார்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார்(வயது 22). எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்து உள்ளார். ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி–எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா(20). திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இவரும், அருண்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். இதனால் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதனால் அக்டோபர் 31–ந் தேதி தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு, அதனை முறைப்படி பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனால் முறைப்படி திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர். தொடர்ந்து சிவன்கோவிலில் நிர்வாகத்தை அணுகி, திருமணம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்று உள்ளிட்டவைகளை கொடுத்தனர். கட்டணமாக ரூ.600–ம் அலுவலகத்தில் கொடுத்து உள்ளனர். ஆனால் கோவில் அலுவலர்கள் மறுநாள் வருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து திருமண ஏற்பாட்டுடன் மணமக்கள் நேற்று காலை கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஏராளமான திருநங்கைகள், ஸ்ரீஜாவின் கல்லூரி தோழிகளும் வந்தனர். அருண்குமாருடன் சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்களின் பெற்றோர் வரவில்லை.
திருநங்கைகள் முற்றுகை
பின்னர் அவர்கள் கோவில் அலுவலகத்துக்கு சென்ற போது, இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும். திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் திருநங்கை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்து உள்ளது. ஆகையால் சட்டப்படி திருமணத்தை நடத்தலாம் என்று திருமண வீட்டார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திடீரென திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அவர்களும் திருமணத்தை நடத்த அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் திருமணத்தை வேண்டுமானால் கோவிலில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்கான பதிவு சான்றிதழை தரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் திருநங்கைகள் எங்களுக்கு முறைப்படி சான்றிதழ் வேண்டும். திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமணம்
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த இளைஞரிடம் திருநங்கை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்ததற்கான அரசாணை நகல் இருந்தால் கொடுங்கள், அதிகாரிகளிடம் பேசி திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என்று தெரிவித்தனர். ஆனால் திருநங்கைகளிடம் அதற்கான நகல் ஏதும் இல்லை. அதே நேரத்தில் முகூர்த்த நேரம் முடியும் சூழல் உருவானது. இதனால் காலை 11–40 மணிக்கு கோவிலில் வைத்து மணமக்கள் மாலை மாற்றி தாலி கட்டி திருமணத்தை நடத்திக் கொண்டனர். அப்போது அங்கு கூடி இருந்த திருநங்கைகள் உற்சாகமாக ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து திருமண விருந்து நடந்தது.
இது குறித்து திருநங்கைகள் கூறும் போது, தற்போது திருமணம் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *