வெளிநாடுகளின் கோரிக்கையின்படி நாடாளுமன்றத்தைக் கூட்டவே கூடாது! – கோட்டா சண்டித்தனம்
இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“மைத்திரி – மஹிந்த அரசில் நான் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. தற்போதைய அமைச்சர்கள், மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டிய தேவை உள்ளது.
அதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுத்து அரசை அமைக்க வேண்டும்.
வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு முகம் கொடுக்கும் பல்வேறு முயற்சிகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது. ஆனால், நாங்கள் பொதுவாக அதனைக் கவனிக்கவில்லை.
எமது அரசமைப்புக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். வெளிநாட்டவர்கள் கேட்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது.
ரணில் விரும்பினால் அலரி மாளிகையில் தங்கியிருக்கலாம். அவர் பிரதமராக பாசாங்கு செய்கின்றார்” என்று குறிப்பிட்டுள்ளார்.