மனிதனின் நடவடிக்கைகளால் 44 ஆண்டுகளில் 60% காட்டு விலங்குகள் அழிந்துள்ளன.: WWF நிறுவனம் அறிக்கை
மனிதனின் நடவடிக்கைகளால் 44 ஆண்டுகளில் 60% காட்டு விலங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக WWF (World Wildlife Fund) எனப்படும் அரச சார்பற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
WWF என்ற அரசு சாரா நிறுவனம் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக் காக்க நிதியுதவி செய்து பாடுபட்டு வருகிறது. மேலும் உலகம் முழுவதும் காட்டு விலங்குகள் குறித்து ஆய்வு செய்து அந்த அறிக்கையை லிவிங் பிளானட் என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது.
அதில் 1970முதல் 2014வரையுள்ள 44 ஆண்டுகளில் மனிதனின் நடவடிக்கைகளால் மீன், பறவை, இருவாழ்வி, ஊர்வன, பாலூட்டி ஆகிய வகைகளைச் சேர்ந்த முதுகெலும்புள்ள உயிரினங்களில் 60 விழுக்காடு அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் உலகில் உள்ள மொத்தப் பாலூட்டி வகை உயிரினங்களின் எடையில் காட்டு விலங்குகள் 4விழுக்காடும் மனிதர்கள் 36 விழுக்காடும், கால்நடைகள் 60விழுக்காடும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.