ஜனாதிபதி மாளிகையிலிருந்து மைத்திரியை விரட்டியடிப்போம்! – கொழும்பில் மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.க. எச்சரிக்கை
ஜனாதிபதி மாளிகையிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொழும்பில் இன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே முஜிபூர் ரஹ்மான் எம்.பி. இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
“அலரிமாளிகையிலிருந்து வெளியேறுவதற்கு 24 மணிநேர அவகாசத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விமல் வீரவன்ஸ வழங்கினார். அவ்வாறு வெளியேறாவிட்டால் அலரிமாளிகை முற்றுகையிடப்படும் எனவும் மிரட்டினார். ஆனால், பல நாட்கள் கடந்தும் நாம் குறித்த மாளிகையிலேயே இருக்கின்றோம். விமல் எங்கே?
எங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவரை விரட்டமுடியாது. குறுக்கு வழியில் பிரதமராகத் தெரிவான மஹிந்த ராஜபக்ஷவை நாம் ஆதரிக்கப்போவதில்லை. ஜனநாயக விரோதச் செயலுக்குத் துணைபோன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையிலிருந்து விரட்டியடிப்போம்” என்றும் ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபூர் ரஹ்மான் மேலும் கூறினார்.