வெள்ளியன்று அவசரமாகக் கூடுகின்றது நாடாளுமன்றம்?
நாட்டில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ள அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாண நாடாளுமன்றத்தை எதிர்வரும் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூட்டும் தனது தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இன்று நண்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 126 எம்.பிக்கள் கையொப்பமிட்டு தன்னிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர் எனவும், எனவே, இலங்கை அரசியல் சட்டத்தின் பிரகாரம் தன்னால் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் எனவும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தான் இன்று அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார் என்று மனோ கணேசன் மேலும் கூறினார்.