ரணில் பக்கம் பந்து! – பாய்ந்த வேகத்திலேயே யூ டேன் அடித்தார் வடிவேல் சுரேஸ்

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்கவும், பிரதி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேசும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தனர்.

வெளிநாட்டில் இருந்து மகிந்தவுக்கு ஆதரவளித்த வசந்த சேனநாயக்க நேற்று நாடு திரும்பியதும், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து அவருக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.

அதேவேளை, பிரதி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஸ் நேற்று மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அலரி மாளிகைக்குச் சென்ற வடிவேல் சுரேஸ், தாம் மரியாதை நிமித்தமாக வாழ்த்துக் கூறவே மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததாகவும், ரணில் விக்ரமசிங்கவையே தான் ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பேசிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

”எனக்கு மகிந்த ராஜபக்சவை நீண்ட நாட்களாகத் தெரியும். அவரது அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பணியாற்றியுள்ளேன். எனவே அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்.

ஆனால், நான் இன்னமும் ஐதேகவிலேயே இருக்கிறேன். கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஆதரிப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *