ரணிலா? மஹிந்தவா? மலையக மக்கள் முன்னணிக்குள் பெரும் குழப்பம்! – புது அணி உதயமாகும் சாத்தியம்
மலையக மக்கள் முன்னணியின் தலைவரான வே.இராதாகிருஸ்ணனும், அரவிந்தகுமார் எம்.பியும் மஹிந்தவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதால் முன்னணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கட்சியின் மத்தியகுழுவுக்கும், அரசியல் உயர்பீடத்துக்கும் அறிவிக்காமல், இவ்விருவரும் மஹிந்தவை சந்தித்துள்ளதால் மூத்த உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும், அனுசா சந்திரசேகரன், ராம் ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
சாந்தினி சந்திரசேகரன், மஹிந்தவை ஆதரித்த காரணத்தால் அவரிடமிருந்து தலைமைப்பதவியை பறித்த இராதாகிருஸ்ணன் தற்போது எந்த அடிப்படையில் மஹிந்தவை ஆதரிக்கும் முடிவை எடுக்க துணிந்துள்ளார் என்று முன்னணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் ஒரு பிரிவு மஹிந்தவை ஆதரிக்கும் பட்சத்தில் முன்னணி இரண்டாக உடையக்கூடும் என்று ஹட்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்திநிலையில் இருப்பவர்கள் இணைந்து புதிய அணியொன்றை உருவாக்கி முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து அரசியல் பயணத்தை நீடிப்பார்கள் என்றும் அறியமுடிகின்றது.