கொதிக்கிறது கொழும்பு அரசியல்! அலரி மாளிகையை விடமாட்டோம்!! – ஐ.தே.கவும் சூளுரை
ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையிலேயே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
“ராஜபக்ச குழுவினர் வன்முறையை ஏவிவிடலாம். எம்மை அச்சுறுத்த குண்டர்களை அனுப்பலாம். ஆனால், நாங்கள் நாட்டின் சட்டபூர்வமான பிரதமர் என்ற வகையில் எமது கட்சித் தலைவரைப் பாதுகாப்போம்.
ஜனநாயகத்துக்கான இந்தப் போராட்டத்தில் பங்கேற்க, கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை அலரி மாளிகையில் இன்று ஒன்று கூடுமாறும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கூட்டும் வரை போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இன்று காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு ரணில் வெளியேறாவிடின், உள்ளே புகுந்து அவரை வெளியேற்றுவோம் என்று கூட்டு எதிரணி நேற்று எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவில் பாதுகாப்பை அகற்றவும், அதிபர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அலரி மாளிகைக்குள் இன்று படையினர், அல்லது காவல்துறையினர் அனுப்பப்படவோ, மகிந்த ஆதரவாளர்கள் நுழையவோ முயற்சிக்கலாம் என்பதால், அங்கு ஐதேக ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ் நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.