வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் அலரி மாளிகையில் ரணில் அவசர சந்திப்பு!
வெளிநாட்டு இராஜதந்திரிகளை இன்று மாலை அலரி மாளிகைக்கு அழைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தி வருகின்றார்.
பிரிட்டன், கனடா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் காலக்கெடு விதித்துள்ள நிலையில், இந்த அவசர சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரி நாட்டு மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் மஹிந்தவுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்த்தமை, அரசமைப்புக்கு முரணாக தன்னிடமிருந்து பிரதமர் பதவியைப் பறித்தமை, பெருன்பான்மைப் பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசிய முன்னணி தயாராக இருக்கின்ற போதிலும் நாடாளுமன்றத்தை வேண்டுமென்றே ஒத்திவைத்தமை உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ரணில் விரிவாக எடுத்துரைத்து வருகின்றார்.