இலங்கையின் அரசமைப்புக்கமைய அனைவரும் செயற்பட வேண்டும்! – ஆட்சிக் கவிழ்ப்பையடுத்து ஐரோப்பிய நாடுகள் கூட்டாக வலியுறுத்து
அனைத்துத் தரப்புகளும் இலங்கையின் அரசமைப்புக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் நேற்று இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து. ருமேனியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றோம். அனைத்துத் தரப்புகளும், முற்றிலும் இலங்கையின் அரசமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும், வன்முறைகளில் இருந்து விலகி, நிறுவன செயல்முறையை பின்பற்றுமாறும், சுதந்திரமான அமைப்புகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை மதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என்றுள்ளது.