இரு தமிழர்களைக் கடத்திய சம்பூர் கடற்படைத் தள துணைத் தளபதிக்கு விளக்கமறியல்!

கொழும்பில் இரண்டு தமிழர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டில், சம்பூரில் உள்ள கடற்படையின் துணை கட்டளை அதிகாரி லெப்.கொமாண்டர் சம்பத் தயானந்தவை, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி பக்கிலிசாமி லோகநாதன் மற்றும் இரத்தினசாமி ஆகியோர் வாகனம் ஒன்றுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இவர்கள் பணம் செய்த வாகனம் வெலிசற கடற்படைத் தளத்தில் பாகங்களாக இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அத்துடன், லெப்.கொமாண்டர் சம்பத் தயானந்தவிடம் இருந்து லோகநாதனின் அலைபேசியையும் கண்டுபிடித்தனர்.

குண்டு ஒன்றுடன் வாகனத்தை தாம் கண்டுபிடித்ததாகவும், அதில் இருந்த அலைபேசியே அது என்றும், இதுபற்றி தாம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தவில்லை என்றும் லெப்.கொமாண்டர் சம்பத் தயானந்த கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர், பல மணிநேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, கொழும்பு நீதிவான் முன்பாக அவரை முன்னிறுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *