‘வழங்கு வழங்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கு!’ – மலையக மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துமாறு வலியுறுத்திக் கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘எங்கள் குருதி அட்டைக்கு! எங்கள் உழைப்பு அரசுக்கு!!’, ‘அதிகரித்த விலையிலும் அரைகுறைச் சம்பளமா?’, ‘ஏழை மக்களை ஒடுக்காதே அரசே’, ‘வழங்கு வழங்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கு’, ‘சுரண்டாதே சுரண்டாதே எங்களது உழைப்பைச் சுரண்டாதே’, ‘அரசே நீ என்ன தோட்ட முதலாளியின் தூதுவரா?’, ‘சலுகைகளைக் கேட்கவில்லை; உழைப்புக்கேற்ற ஊதியத்தையே கேட்கின்றோம்’ போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளைப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
நேற்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.