பாடசாலை குடிதண்ணீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு! – மாணவர்கள் அதிர்ச்சி

டில்லியில் பாடசாலையொன்றில் குடிதண்ணீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி அருகே ரோஹிணி மாவட்டம் முக்மேல்பூர் என்ற கிராமத்தில் டெல்லி நிர்வாகத்திற்கு உட்பட்ட எம்சிடி பாடசாலை செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தப் பாடசாலையின் குடிதண்ணீர் தொட்டியில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மனித எலும்புக்கூடு மற்றும் எலும்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் குடிதண்ணீர் தொட்டியிலிருந்து எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர். இது தொடர்பாக பாடசாலை அதிபருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனை உறுதிசெய்துகொண்ட பாடசாலை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த பொலிஸார் மற்றும் தடய அறிவியல் ஆய்வுக்கூட குழு ஒன்றும் நேரில் சென்று பார்வையிட்டது. ஆய்வக சோதனைகள் செய்த பிறகு அந்த எலும்புக்கூடு சமீபத்தியதா அல்லது பழையதா என்பதை அறியவும் அது ஆணுடைய எலும்புக்கூடா அல்லது பெண்ணுடையதா என்பதை அறியவும் தடய அறிவியல் ஆய்வக அறிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், துப்புரவுப் பணியாளர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாடசாலை தண்ணீர் தொட்டியில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *