யாழ்.முஸ்லிம் மக்களுடன் கூட்டமைப்பினர் சந்திப்பு
யாழ்ப்பாண மாநகர முஸ்லிம் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றுச் சந்தித்தனர். தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நேற்று நண்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. பெரும் திரளான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
ஒஸ்மானியா கல்லூரியின் குடிதண்ணீர்த் தேவையை நிறைவு செய்யும் விதமாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரத்தின் ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிதண்ணீர் சுத்திகரிக்கும் ஆரோ பிளாண்ட் பிரதம விருந்தினர்களால் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.
இதேபோல வடமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியொதுக்கீட்டில் கீழ் 3இலட்சத்து 20ஆயிரம் ரூபா பெறுமதியில் 64பேருக்குச் சமையல் உபகரணங்களும், 2 இலட்சத்து 76ஆயிரம் ரூபா பெறுமதியில் 17 பேருக்கு துவிச்சக்கரவண்டியும், 70 ஆயிரம் ரூபா பெறுமதியில் ஜே.282 கிராம சேவையாளர் பிரிவுள்ள முதியோர் சங்கத்திற்கு ஒலிபெருக்கி சாதனம் என்பனவும் இதன்போது வழங்கப்பட்டன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அய்யூப் அஸ்மின், இ.ஜெயசேகரம், கேசவன் சயந்தன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மனுவல் ஆனோல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.