மைத்திரியை ஒழிக்க ‘ஒப்பரேசன் – 02’ – எஸ்.பி. பகீர் தகவல்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியிலும் படுகொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர்கொண்ட அணி தெரிவித்துள்ளது.
கூட்டரசிலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் 15 பேர்கொண்ட அணியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி.,
“ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை றோ அமைப்பு கொலைசெய்ய திட்டம் தீட்டுவதாக தகவல் பரப்பட்டது. ஜனாதிபதிக்கும், இந்தியாவுக்குமிடையிலான உறவை சீர்குலைக்கும் நோக்கிலேயே திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறு தகவல் பரப்பட்டுள்ளது. இதுகூட அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இடம்பெற்றதாகவே இருக்கவேண்டும்.
எனினும், ஜனாதிபதியும், இந்தியப் பிரதமர் மோடியும் பேச்சு நடத்தி இப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்துள்ளனர். இருநாடுகளுக்குமிடையிலான உறவை உறுதிப்படுத்தியுள்ளனர். பிரதமர் ரணில் இந்தியா செல்வதற்கு முன்னர், தொலைபேசியூடாக மோடி, பேச்சு நடத்தியுள்ளமை சிறப்பான விடயமாகும்.
ஜனாதிபதியை கொலை செய்வதற்கு சூழ்ச்சி வகுக்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் இன்னும் உரிய விசாரணை இல்லை. இந்நிலையில் அரசியல் ரீதியாகவும் ஜனாதிபதியை இல்லாதொழிக்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமே, இந்த போலி தகவல் பறிமாற்றமாகும்” என்றும் எஸ்.பி.திஸாநாயக்க கூறினார்.